Saturday, October 8, 2011

இதுதான் வாணி விழா..................

கல்வி, கலை ,கலாச்சாரம் ,விழாக்கள் என்பன தனிப்பட்ட விடயம் அன்றி சமூகத்தோடு சேர்ந்ததுவே என்பத னை மீண்டும் ஒரு முறை பறை சாற்றி நிற்கின்றது கிழக்கு பல்கலைகழகம் - திருகோணமலை வளாகத்தில் நடைபெற்ற 'வாணி விழா'. 


கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற விழாவிலே
திருமலை வளாக மாணவர்களின் அழைபின்படி இறைவனின் குழந்தைகளுக்காக திருகோணமலையில்  செயற்படும் 'அன்பு இல்லம் ' மாணவர்கள் பங்கு கொண்டு சிறப்பித்தார்கள். 

பல்கலைகழகம் என்பது கல்வி வழங்கும் ஒரு நிறுவனம் மட்டுமல்ல அது ஒரு சமூகத்தின் அங்கம் என்பதையும் , சமூக பொறுப்புகளை ஏற்கும் ஒரு முன்னோடி என்பதையும் இந் நிகழ்வு மூலம் தெளிவு படுத்தி நிற்கின்றது .
 

இன மத மொழி பேதமின்றி மாணவர்கள் பயிலும் இவ் வளாகத்தில் அருட்தந்தை C .P .இராஜேந்திரம் அவர்களின் ஆசியுடனும்   Dr .S .ரகுராம் அவர்களின் வாழ்துடனும் மற்றும் ஏனைய விரிவுரையாளர்கள் , ஊழியர்கள், மாணவர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றது .
 

'அன்பு இல்லம் ' மாணவிகளின் ஒவ்வொரு நிகழ்வும் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் மூழ்க செய்தது .
பஜனை, பூஜா நடனம், வேப்பிலை நடனம் , பாடல் ,தனி நடனம் என ஒவ்வொரு நிகழ்வும் அந்த தெய்வ குழந்தைகளால் சிறப்புடனே அரங்கேறியது . திருமலை வளாக மாணவிகள் சிலரால் இடம்பெற்ற பாடல் நிகழ்வில் அன்பு இல்ல மானவு ஒருவர் தானாகவே முன் வந்து தாளம் (ஜால்ரா ) போட்டமை அவர்களிடத்திலும் சமூகம் சார்ந்து செயற்பட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்பதை விளக்கி நிற்கிறது .


(திருமலை வளாக மாணவிகளின் பாடலுக்கு தாளம் போடும் அன்பு இல்ல சிறுமி)

'நீங்கள் யாரும் தனித்தவர்கள் கிடையாது உங்களின்
அண்ணா அக்காவாக நாங்கள் இருக்கின்றோம் ' என்பதையே மாணவர்கள் மீண்டும் மீண்டும் அந்த தெய்வ குழந்தைகளிடம் உறுதி கூறினார்கள். 

வழமையான 'வாணி விழா ' போலல்லாது இம்முறை திருமலை வளாகத்தில் சமூகத்துடன் கூடிய சிறந்த முன்னுதாரணமான விழா இடம்பெற்றுள்ளது. பொதுவாக அனைத்து பல்கலைகலகங்களிலும் நவராத்ரி விழா கொண்டாடப்படுவது வழமை, ஆனால் அனேகமாக  அந் நிகழ்வுகள் தனிப்பட்ட ஒரு நிகழ்வாக அல்லது ஒரு பூஜை  நிகழ்வாகவே இடம் பெறுகின்றது .ஆனால் எம்மிடத்தில் மாணவர்கள் என்ற அந்தஸ்தை தவிர சமூக பொறுப்பு வாய்ந்த பிரஜைகள் என்ற எண்ணம் மேலோங்கி இருக்க வேண்டும் . 


சமூகத்தை தவிர்த்து எதையும் எம்மால் சிந்திக்க முடியாது . அப்பா அம்மா அக்கா அண்ணா என்று அனைத்து உறவுகளுடனும் வாழும் நாம் இவ்வாறான சில தினங்களிலாவது அண்ணா அக்கா என்ற உறவுகளாக யாரும் இல்லையே என்று ஏங்கும் பிள்ளைகளுக்கு உறவாகலாமே ?
 

இந்த சிறந்த விழாவிலே நானும் ஒரு பங்கு வகித்தேன் என்பதிலும் இவ் வளாகத்தில் ஒரு மாணவியாக நானும் இருக்கிறேன் என்பதிலும் கர்வம் கொள்கிறேன்.